Monday, March 21, 2011

பெண்கள் தினம்!

பெண்ணே!

நீ அழகி என்றால்
வெட்கி நின்றாய்!
நீ அன்பு என்றால்
உருகி நின்றாய்!
நீ கருணை என்றால்
இறங்கி நின்றாய்!

இன்னும் இப்படிப்பல!

அடுத்தவர் சொல்கேட்டு
அதுவாகவே மாறி
அடுத்தது என்னவென்று
அகப்படாமல் போனதால்தான்
பெண்ணே நீ

அன்றுமுதல் இன்றுவரை
அடிமைப்பட்டே கிடக்கிறாய்!
சுயமாய்ச் செயல்பட மறுக்கிறாய்!
சுலபமாய்ப் பிறரைப் பழிக்கின்றாய்!

உனக்கு நீயே யாரென்று
உணருகின்ற நாள்வரை
உயர்வு என்பதை உன்வாழ்வில்
உணராமல் போவாயே!

பெண்ணே!

வெட்கம் என்பது தவறல்ல
அடக்கம் என்பதும் தவறல்ல!
அன்பு என்பது தவறல்ல
கருணை என்பதும் தவறல்ல!

உனக்காய் உன்னுள் ஊறும்
உணர்வுதன்னை மதித்திடு
உற்றோர் மற்றோர் பெருமைக்கு
உணர்வை மாற்ற மறுத்திடு!

ஆணும் பெண்ணும் சேர்ந்ததுதான்
அகில வாழ்க்கை புரிந்திடு!
ஆணோ பெண்ணோ தனித்திருப்பின்
ஆக்கம் ஏதுமில்லை விளங்கிடு!

ஆயுள்காலம் முழுமையும்
அடுத்தவர் உயர்ந்திடத் தோள்கொடு!
அனு முதல் அண்டம் வரை
அனைத்தும் உன்வசப்படும் நம்பிடு!

மங்கையர் தினமாம் இந்நாளை
மாட்டுப் பொங்கலாய் நினையாமல்
மாற்றம் காணப் புவியதனில்
மனமேற் கொண்டு உழைத்திடு!

வாணி, சென்னை (உயிர்ப்பூ நூலிலிருந்து.....)

No comments: